Thursday, February 24, 2011

குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள்!

குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு தமிழகத்திலும், டெல்லி அரசியலிலும் அதிகரித்து வருகிறது. தந்தை பெரியார் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள் என்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்றுப் போராடினர். ரசியப் புரட்சியில் குழந்தை குட்டிகளுடன் அனைவரும் போர்க்களத்தில் குதித்தனர். சீனாவைப் புரட்டிப்போட்ட எழுச்சியில் அனைத்துக் குடும்பங்களும் பங்கேற்றன.

குடும்பம் குடும்பமாக அனைவரும் பங்கேற்காத எந்தப் போராட்டத்தின் வெற்றியையும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. எந்தத் தலைவனும் நினைத்துப் பார்த்ததில்லை. அண்மையில் வெடித்த எகிப்து கிளர்ச்சியிலும்கூட இப்படித்தான் அனைவரும் பங்கேற்றனர்.

இப்படி எல்லாம் குடும்பமாக பங்கேற்க சொல்லிவிட்டு, தம்முடைய குடும்பத்தை மட்டும் எதிர்க்கிறார்களே நியாயமா என முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அங்கலாய்க்கிறார். உண்மைதானே பிறகு எதற்கு இந்த எதிர்ப்பு...

அரசியல், ஊடகத்தொழில், திரைப்படத்தொழில் இப்படி பல்வேறு தொழில்களில் மு.கருணாநிதியின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளனர். எந்தத் தொலைக்காட்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், “சுமங்கலி” நிறுவனத்தின் ஆசி வேண்டும். திரையரங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சன் பிக்சர்ஸ், கிளவுட் நயன்ஸ், ரெட் ஜெயன்ட்ஸ்... போன்ற நிறுவனங்களின் அருளாசி இருந்தால்தான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியும். தி.மு.க. கட்சியில் முன்னேற ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, செல்வி, ராசாத்தியம்மாள் இப்படி யாராவது ஒருவரின் அங்கீகாரம்(?)வேண்டும்.

கிராணைட், ரியல் எஸ்டேட் என எந்தத்தொழிலும் கால் பதிக்க, முன்னேற இவர்களின் ஆசீர்வாதம் அவசியம் இருந்தாகவேண்டும். இந்த நிலைமைதான் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அரசியல், ஊடகம், திரைப்படத்துறை என எந்தத்தொழிலிலும் அனைவரும் ஈடுபடலாம்... திறந்தபோட்டி, சுதந்திர வாய்ப்பு என 1947 ஆகஸ்ட் 15 பெற்றுத்தந்த இந்த உரிமைதான் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் முடக்கப்படுகிறது. அதுவும் ஒரே ஒரு குடும்பத்திற்காக இவை அனைத்தும் முடக்கப்படுகிறது.

தி.மு.க. கழகமே குடும்பம் என அண்ணாத்துரை அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் குடும்பமே கழகம் என அதனை மாற்றிவிட்டார் ‘தமிழினத் தலைவர்’. ஆட்சி, அதிகாரம் என்பது ஒரே குடும்பத்தின் நலனுக்கு உட்பட்டதாக மாறும்போதுதான் அனைவருக்குமான வாய்ப்பு முடக்கப்படுகிறது.

மன்னராட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் உருவாக்கித்தந்த சமவாய்ப்பு முடக்கப்படுவதுதான் இன்றைய பிரச்சனையின் வேர்.. ஜனநாயகத்தின் இந்த மாண்பு பறிக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்? எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இதுபோன்ற நிலையை ஏற்படுத்தியதால் என்ன ஆனார் என்பதை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த நிலை இங்கும்வர குடும்பம் குடும்பமாக மக்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். வருவார்கள்...

No comments: