Wednesday, May 17, 2017

சமூகப் பிளவும் தாய்மொழி வழியிலான கல்வியும்


கற்றல் என்பது மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் நடக்கும் தொடர் நிகழ்வாகும். மனிதன் பிறந்தது முதல் கல்லறைக்குச் செல்லும் வரை நடக்கும் தொடர் ஓட்டமே கல்வி. இருப்பினும், கல்வியாளர்களின் கருத்துப்படி, மரபு வழியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விழுமியங்கள், நெறிமுறைகள், திறன்கள் அறிவுச் செல்வங்கள் ஆகியவற்றை, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வதையே கல்வி என்கின்றனர்.

இத்தகைய கல்வியை அளிப்பதற்காக இந்திய சமுதாயத்தால் ஏற்பிசைவு அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில், அடிப்படைக் கல்வி அளிக்கும் நிறுவனங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

அரசுப் பள்ளிகள்
மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள்
கேந்திரிய வித்யாலயாக்கள்
மத்திய அரசுப் பள்ளிகள்

இவற்றுக்கிடையே பயிற்று முறை, பயிற்று மொழி போன்ற வேறுபாடுகள் பல இருந்தாலும் அடிப்படையில் இவற்றை வேறுபடுத்துவது பயிற்று மொழியே.

மத்திய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள் இந்தி மொழி வழியிலான விழுமியங்கள், மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தியும், மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள் ஆங்கில மொழி வழியிலான மதிப்பீடுகள், விழுமியங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன. (இதனால் தான் குடிக்கும் தண்ணீருக்குத் திண்டாடும் நம்நாட்டில், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் ரைன் ரைன் கோஅவே படித்துக் கொண்டிருக்கின்றன.)

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் தமிழ்வழிக் கல்வியில் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் ஊடேயே ஒரு ஆங்கில மொழிப் பாடத்தையும் கற்பிக்கிறது.

அனைத்து தனியார் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி என்பதே பெரு வழக்காக கொண்டுள்ளன. சிற்றூர்களைக்கூட இந்த நர்சரிப் பள்ளிகள் விட்டு வைக்கவில்லை. தமிழ்ச் சமூகம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள மிகக் கடினமாக முயன்றுகொண்டிருக்கிறது. கடினமாக என்று சொல்வதற்குக் காரணம், ஆங்கிலம் ஒரு மொழி, அந்த மொழியை கற்றுக்கொள்வது என்ற எல்லையையும் தாண்டி, அம்மொழி வழி பல்வேறு துறை அறிவையும் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் தான். அதுவும் அம்மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளின் வழியாக.

தமிழ்ச் சமூகமே தன்னுடைய தாய்மொழி வழிக் கல்வியை புறக்கணித்துவிட்டு இவ்வாறு செல்ல முயற்சிப்பதற்குக் காரணம் என்ன?

இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு மொழிப் பற்றில்லை, மொழி உணர்வு இல்லை என்று சொல்வது பொருத்தமான பதிலாக இருக்க முடியாது.
எந்தப் பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் யோசிப்பர். அப்படி யோசிக்கும் பொழுது அவர்களுக்குப் பிரகாசமாகத் தெரிகின்ற மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகளையே, அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆங்கில தெரிந்தால் வழக்கறிஞனாகி வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். வழக்குமன்றத்தில் வழக்காடலாம்.
ஆங்கிலம் தெரிந்தால் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளில் அமரலாம்.

ஆங்கிலம் தெரிந்தால் மருத்துவ பட்டப்படிப்பை முடித்து, மருத்துவராகி செல்வச் செழிப்போடு சிறக்கலாம்.

ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால், பன்னாட்டு நிறுவனங்கள் தேடி வந்து வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அழைத்துச் செல்கின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமூத்தில் மேல்தட்டு- உயர்வாழ்க்கை என்பது ஆங்கிலம் சார்ந்ததாக அமைக்கப் பட்டிருக்கிறது. உடல் உழைப்பைச் சாராத, சமூகத்தின் அதிகாரம் செலுத்தும் இடத்திற்குச் செல்லுவதற்கான கடவுச் சீட்டாக ஆங்கிலம் இருப்பதால், தாய்மொழி வழிக் கல்வியை எதிரானதாகக் கருதுகின்றனர்.

அண்மையில் சென்னைக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டான். (டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் வெளிவந்துள்ளது). தன்னால் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசமுடியவில்லை. படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் அந்த மாணவன்.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களில் 90 விழுக்காட்டினர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாததால், படிப்பைத் தொடராமல் நிறுத்திவிடுகின்றனர்.
ஒரு மொழியை கற்றுக்கொள்ளுவதற்கும், அந்த மொழி வழி ஒரு துறை அறிவைப் பெறுவதற்கும் அதாவது பயிற்றுமொழியாகவே அம்மொழி இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

நாம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள முயற்சிப்பதைவிட, அம்மொழி வழியாக பல்வேறு துறை அறிவைப் பெற முயற்சித்துப் பரிதவித்து நிற்கிறோம். 
ஆங்கிலம் படித்துவிட்டால் சிறப்பான எதிர்காலத்திற்கான விசா கிடைத்துவிட்டதாக இந்த சமூக மனம் கருத வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் மொழிக் கொள்கைகள், பல்வேறு வல்லுநர்களின் பரிந்துரைகள் எல்லாம் அந்த விசாவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இதனால் உழவுத் தொழில் உள்பட இந்த சமூகத்தின் வாழ்வோடு பிணைந்துள்ளவை அனைத்தும் புறக்கணிப்பட்டு, புறந்தள்ளப்பட்டு வருகின்றன. அவற்றையும், அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களையும் கீழானவர்களாகக் கருதும் மனப்பான்மையும் வளர்ந்து நிற்கிறது.

ஆங்கிலம் தெரிந்தவன் அரசோடும் அதிகாரத்தோடும் எளிதாகத் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இத்தகைய கொள்கைகளால், செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகம் பிளவுண்டு நிற்கிறது. இணக்கம் காண முடியாத முரண்பாடு இந்தச் சமூகத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து நிற்கிறது.
இதற்கு நேர்மாறாக, தாய்மொழியில் கற்பவன் நாட்டுப்புறத்தானாக, விவரம் தெரியாதவனாக, முன்னேறுவதற்கு வழியற்றவனாக கருதும் நிலை இந்த சமூகத்தில் உள்ளது. சமூகத்தின் கருதுநிலை மட்டுமல்ல, எதார்த்தமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

இதற்கு மிக எளிமையான எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்க்கலாம். சென்னை போன்ற நகரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளில் பயணிப்பதற்குக் கூட ஆங்கிலம் தெரியவேண்டிய கட்டாயம் உள்ளது. 18K, 18A, 18G, 18D இந்த நான்கு வழித்தடமும் வெவ்வேறு முனைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளாகும். பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல 18K, பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்ல 18A, பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லுவதற்கு 18G. இந்த ஆங்கில எழுத்துகள் தெரியாத, தமிழ் மட்டும் தெரிந்தவன் இந்தப் பேருந்துகளில் பயணிப்பது எவ்வளவு கடினம் என்று எண்ணிப் பாருங்கள். பயணம் செய்வதற்கே இந்தச் சிக்கல் என்றால், உயர் கல்வி முதல் அரசு அலுவலகங்கள் வரைச் செல்வதற்கு எத்தனை தடைகள் இருக்கின்றன.
இதனால்தான் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறி நிற்பதுபோல், தங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் தடுமாறிவிடக் கூடாது என்ற அச்சத்தால், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன் பெற்றோர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இப்படி மொழியின் பேரால், இந்தச் சமூகம் பிளபட்டு நிற்பதற்கு முடிவு கட்டாமல், தமிழர்களால் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாது.
இந்த முரண்பாட்டைக் களைவதற்கான முதற்படி... தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி.

அரசு, அதிகார நிறுவனங்கள் உள்பட அனைத்து வேலைவாய்ப்புகளும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி பெற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆங்கிலம் தெரியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிப்பதில் இருந்து தமிழ்ச் சமூகம் விடுபடமுடியும். மாணவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக, வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கல்வியைக் கற்றவர்களாக தலைநிமிர்ந்து செல்ல முடியும். புதியது புனையும் ஆற்றலைப் பெற முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், சமூகப் பிளவுகளுக்கும் முரண்பாட்டுக்கும் உரிய அடிப்படையை களையக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியே.

இன்றைக்கு கல்வி வியாபாரமாக்கப்பட்டு, அதற்குரிய இலக்கணத்தையே இழந்து நிற்கிறது. ஆங்கில வழியில் பத்து ஆண்டுகள் படித்து முடித்தவனால், ஆங்கிலத்தில் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் தடுமாறும் தத்துப்பிள்ளகளாக அவர்கள் காட்சியளிக் கின்றனர். புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் பெருகி நிற்கும் நர்சரி பள்ளிக்கூடங்கள் இதைத் தான் சாதித்துள்ளன.

பள்ளிக் கல்வி நல்ல வியாபாரப் பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக ஏற்றம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்து வருகிறது.
இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி மட்டுமே. கல்வியை வணிகமாக்கி, தங்களைப் வளப்படுத்திக்கொள்வதையும் இக்கல்வி ஒழித்திடும்.
மக்களை, எதிர்காலத் தலைமுறையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியைக் கொண்டுவருவதற்காக முயற்சிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவையும்கூட.

(2010 ஆம் ஆண்டு லயோலா கல்லூரி நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)

Sunday, May 7, 2017

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்றால் என்ன?

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் இன்று தொடங்குவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

*அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில்* என்றால் என்ன?

வானிலையியல் துறையின் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இவை. ஜோதிடம், பஞ்சாங்கத்தில் மட்டுமே இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து பகுதிகளைக்கொண்டும், ராசி, கிரகம் அடிப்படையிலும் கணிப்பதாகும். இதில் பரணி நட்சத்திரம் முதல் கிருத்திகை நட்சத்திரம் வரையிலான சூரியனின் பயண காலத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்கின்றனர்.

இதுதொடர்பாக இன்னொரு புராணக் கதையும் உள்ளது. முன்னொரு காலத்தில் 12 ஆண்டுகள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்களாம். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி பகவானுக்கு மந்த நோய் ஏற்பட்டது. இதனால் உடம்பில் சேர்ந்த கொழுப்பை குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பை உண்ண வேண்டுமாம். இதற்காக அக்னி காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான். அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் வருணனிடம் முறையிட்டனர். ‘‘ அனைவரையும் காப்பாற்றுவதாக’’ வருணன் உறுதிமொழி அளித்தாராம். இதனையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் சென்று ‘‘காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான்’’ என முறையிட்டான். உடனே கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். பார்வையாலேயே புரிந்துகொண்ட அர்ச்சுனன், அம்புகளை சரமாரியாக எய்து காண்டவ வனத்தின் மீது எய்து கூடுபோல்(?) கட்டினான். உடனே அக்னி வனத்தை எரிக்கத் தொடங்கினான். அப்போது ‘‘உனக்கு 21 நாட்கள்தான் அவகாசம், அதற்குள் வனத்தை அழித்து பசியைத் தீர்த்துக்கொள்’’ என்றார். அதன்படி காண்டவ வனம் எரிக்கப்பட்ட 21 நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.    

இந்த ஜோதிட நம்பிக்கையை வானியல் ஏற்றுக்கொள்வதில்லை. ‘‘கத்தரி வெயில் என்பது 100 % வானிலையியல் துறை வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தில் மட்டும் பயன்படுத்தும் வார்த்தையாகும். ராசி, நட்சத்திர அடிப்படையில் வானிலையியல் துறை இயங்குவதில்லை. கோடை வெயில் மே மாதம் சுட்டெரிக்கும், கடற்காற்றின் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவை அதிகரிப்பதோ, குறைவதோ நிகழும்’’ என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த திரு.ரமணன் தெரிவித்தார்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் தொடங்கியது என ஊடங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிடுகின்றன. உண்மையில் வானிலை அறிவியலுக்கும் இதற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.

கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் என்று சொல்ல விரும்பினால்,  ஜோதிடத்தின் படி அல்லது பஞ்சாங்கத்தின் படி என்று குறிப்பிட்டுக்காட்டி பயன்படுத்தலாம். அறிவியலோ என மயக்கம் கொள்வதும், மக்களை மயங்கச்செ ய்வதையும் தவிர்க்க வேண்டும். 

மணிமாறன்
ஊடகவியலாளர்

Monday, March 27, 2017

புராணப் புளுகை உண்மையாக்க முயற்சியா?

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், சேது கால்வாய் திட்டப் பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் போது, இந்த ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் வழக்குப்போட்டு பா... உள்ளிட்ட மதவாத அமைப்புகள் புரளியை கிளப்பின.
கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல், இதுதான் ராமர் கட்டிய பாலம் என்றனர். தற்போது இந்திய அரசாட்சி பாஜகவிடம் இருப்பதால், இவற்றை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு அமைத்துள்ளனர். இந்தப் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா? இயற்கையானதா என்பதை அந்தக் குழு ஆய்வு செய்ய இருக்கிறது.

ஆதம் பாலம், ராமர் பாலம் என்றும் உள்ளூர் மக்களால் மணல் திட்டுகள் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

புவியியல், இயற்பியல் படித்த மாணவர்கள் பெரும் நிலப் பகுதிகளை ஒட்டி அதனை இணைத்திடும் மணல் திட்டுக்கள் அமைந்திருப்பது குறித்துப் படித்திருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் மெல்லியதாய் இணைக்கும் நிலப்பகுதியே பனாமா நாடு என்று குறிக்கப்படுகிறது. இந்த பனாமா நாட்டிற்கு இடையே தான் பனாமா கால்வாய் (நீர் வழி) வெட்டப்பட்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலிற்குச் செல்லும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பனாமா கால்வாய் மட்டும் இல்லாமல் போனால், பசுபிக் கரையோரப் பகுதியில் உள்ள அமெரிக்க துறைமுகங்களில் இருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், அதாவது அட்லாண்டிக் கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் சென்றிருக்க வேண்டும். 

இப்படி இரண்டு பெரிய கண்டங்களை அல்லது நிலப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியைத்தான் புவியியலிலும், இயற்பியலிலும் இஸ்த்மஸ் (Isthmus) என்று அழைப்பார்கள். பெரும் நிலப்பகுதிகளுக்கு இடையிலான இதுபோன்ற குறுகிய நிலப்பகுதிகள் உலகில் ஏராளம் உள்ளன. அவை கடலில் மூழ்கியோ அல்லது சற்று மேலுயர்ந்த நிலத் திட்டுக்களாகவோ அல்லது ஒன்றிணைந்து கோர்வையான தீவுகளாகவோ அமைந்திருக்கும்.

பனாமா போலவே, மற்றொரு நீர் வழி சூயஸ் கால்வாய் ஆகும். மத்தியத் தரைக் கடலையும், செங்கடலையும் இந்த நீர் வழி இணைக்கிறது. இந்தக் கால்வாய் ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்பிரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியில் உள்ள மணல் திட்டுகளை வெட்டி உருவாக்கப்பட்டதே இந்த சூயஸ் கால்வாய்.

நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள ஆக்லாண்டு தீவின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியில் உள்ள கிரேட்டர் ஆக்லாண்டுடன் இணைக்கும் பகுதியும் குறுகிய மணல் திட்டு தான். அதுவும் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டு.

கனடா நாட்டில் நியூ பவுண்ட்லாந்து என்றழைக்கப்படும் தீவுப் பகுதியை கனடா நாட்டுடன் இணைப்பதும் இப்படிப்பட்ட குறுகிய மணல் திட்டுதான். 

பாக்லாந்துப் போர் நினைவிருக்கும். அர்ஜெண்டினாவின் கடல் பகுதியில் உள்ள இந்தத் தீவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியில் உள்ள தீவு இதுபோன்ற மணல் திட்டுகளால்தான் இணைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியாவுடன் புரூனி தீவுகளை குறுகிய மணல் திட்டுகளே இணைக்கிறது.

இப்படி பெரும் நிலப்பகுதிகளுடன் சிறிய நிலப்பகுதிகளை இணைக்கும் மணல் திட்டுகள் உலகில் ஏராளம் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் மணல் திட்டு. 

இது பாலம் அல்ல. 

அப்படியென்றால், இந்த மணல் திட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டது?

இன்று தனித்தனி கண்டங்களாகப் பிரிந்துள்ள நமது புவியின் நிலப்பகுதி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக இருந்தது. புவியின் மையப் பகுதியில் அதிக வெப்ப நிலையிலுள்ள நெருப்புக் குழம்பு இறுகத் தொடங்கியது. இதனால் புவியின் மேற்பகுதி சுருங்கியது. இதன் விளைவாக ஒன்றாக இருந்த புவியின் மேற்பகுதி பலவாறாகப் பிளந்து நகரத் தொடங்கின. இதனைத்தான் கண்டங்களின் விலகல் (காண்டினெண்டல் டிரிஃப்ட்) என்று கூறுவார்கள். 

நிலநடுக்கம் என்பதே, பெரும் கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் தாங்கி நிற்கும் புவிப் பரப்பின் பெரும்பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும், ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வதனாலும் ஏற்ப டும் நிகழ்வுகளே.

இவ்வாறு ஒன்றாய் இருந்த புவியின் மேற்பகுதி, பெரும் நிலப்பகுதிகளாக (கண்டங்கள்) தனித்தனியாகப் பிரிந்து விலகியபோது, விலகிய அப்பகுதிகளுக்கு இடையே இருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகளின் முனைகள்தான் இப்படி இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே தெரியும் மணல் திட்டுகள் அல்லது நிலத் திட்டுக்கள் ஆகும்.
இதுபோன்ற புவியியல் மாற்றங்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு (2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் சுமத்ரா தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானதுபோன்று) சில நிலப்பகுதிகள் கடலால் அரிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற பெரும் கடற்பேரழிவுகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதை புவியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.

இன்றைய தமிழ்நாடும், இலங்கைத் தீவும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதியே. மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல்கோளும் ஏற்பட்டதால் பிரிந்ததே இன்றைய இலங்கை என்பதும் புவியியலாளர்கள் தரும் விளக்கம். 
இந்த கடல்கோள்களால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடலில் தீவுகளாகவும், மணல் திட்டுக்களாகவும் உள்ளன. 

இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போன இந்த நிலப்பகுதியை ராமர் பாலம் என்று கூறுவது ஏமாற்று வேலையாகும்.

நாசா நிறுவனம் இந்த நிலப்பகுதியை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும் வரை, இதே மதவாதிகள் என்ன கூறிக்கொண்டிருந்தார்கள்? 
ராமேஸ்வரத்தின் கோயில் ஒன்றின் தொட்டியில் மிதக்கும் கல் இருந்தது. இதைக்காட்டி, இதுபோன்ற கற்களைக் கொண்டு தான், ராமன் கடல் கடந்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டான் என்றனர். இந்தக் கதையை ராமேஸ்வரம் சென்று வந்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். 
நாசா செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும்வரை ராமர், பாலம் அமைத்த கதை இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. நாசா நிறுவனத்தின் ஒளிப்படத்தைக் கண்ட வுடன் இந்து மதவாதிகள் புதிய பாலத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். 

இப்புவியின் தோற்றம் முதல் அதன் பரிணாம வளர்ச்சி வரை ஒவ்வொரு கட்டத் தையும் ஆய்ந்து அதற்கான ஆதாரங்களைத் தேடிப்பிடித்து, அறிவியல் உலகம் ஒவ்வொரு உண்மையாக மெய்ப்பித்து வருகிறது. தனது முடிவிற்கான ஆதாரத்தையும் மக்கள் முன் வைக்கிறது. அறிவியல் இப்படி தேடிப் புலப்படுத்திய ஒரு இயற்கை உண்மையை, தனது இதிகாச, புராணக் கதைக்கு ஆதாரமாகக் காட்டி மக்களைப் பழமைக்குள் மூழ்கடிக்க முயல்கின்றனர்.

தமிழர்கள் இதுபோன்ற பகுதிகளை மணல் திட்டு என்றுதான் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். ( ஆங்கிலத்தில் பிரிட்ஜ் என்பதை இந்த இடத்தில் பாலம் என மொழிபெயர்ப்பது தவறு.) கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அருகில் எம்.ஜி.ஆர் திட்டு உள்ளது. 2004 ஆம் ஆண்டு சுழற்றியடித்த ஆழிப்பேரலையில் (சுனாமி) எம்.ஜி.ஆர் திட்டில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. பாண்டிச்சேரிக்கு அருகே தேங்காய் திட்டு உள்ளது.

இப்படிக் கடலில் அமிழ்ந்தும் அமிழாமலும் இருக்கும் பகுதிகளுக்கு தமிழர்கள் வைத்துள்ள பெயர்தான் மணல் திட்டு. கடலுக்குள் திட்டுத் திட்டாகத் தெரிவதால் திட்டு என்றனர். ஆங்கிலேயர் ஆதம் பிரிட்ஜ் என்று கூறியதை பாலம் என மொழிபெயர்த்துக்கொண்டு, இந்துத்துவ வாதிகள் கதை புணைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மதவாத புளுகை நிராகரிப்பதுடன், இதன் உண்மை இயல்பை மக்கள் எளிதாகப் புரியும் வகையில் பெயரை மாற்ற வேண்டும்.  

ஆங்கிலேயர் வைத்த ஆதம் பாலம் என்ற பெயரை நாம் அப்படியே அழைப்பது அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு. ராமர் பாலம் என்றழைப்பது இல்லாத ஒன்றை, பொய்யை மெய்யாக ஏற்றுக் கொள்வதாகும். இதனால் தமிழர்களின் வரலாற்றோடும், இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு தமிழ் மொழியில் இருக்கும் சொல் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பாவாணர் திட்டு என்று பெயரிடவேண்டும். 


பன்னெடுங்காலத்திற்கு முன் ஆழிப் பேரலையின்(சுனாமி) தாக்குதலில் இந்தியப் பெருங்கடலுக்குள் அமிழ்ந்துபோன குமரிக் கண்டம் பற்றி அறிந்துரைத்தார் பாவாணர். இந்தப் பாவாணரின் பெயரில் பாக் நீரிணையில் உள்ள மணல் திட்டுப் பகுதிகளை அழைத்திடவேண்டும். 

-
மணிமாறன்